சென்னை:
சென்னை அம்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் வழங்கிய பூத் சிலிப்பில் தேர்தல் தேதி மற்றும் மாதம் தவறாக அச்சடித்து வினியோகம் செய்ததால் பொதுமக்கள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர்.

2021 சட்டப்பேரவைத் தேர்தல் தேதி 06.04.2021 என்பதற்கு பதிலாக 04.05.2021 என பூத் சிலிப்பில் தேதியும் மாதமும் தவறாக அச்சடித்து தொகுதி முழுவதும் தற்போது வினியோகம் செய்துள்ளனர். அதனால் வாக்காளர்கள் குழப்பம் அடைந்ததோடு அரசியல் கட்சியினரும் குழப்பம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி 06.04.2021 என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்த கையோடு அனல் பறக்கும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை அம்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுக்கு உட்பட்ட கொரட்டூர் பகுதியில் பாகம் வாரியாக வார்டுகளில் உள்ள வாக்காளர்களுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி விஜயலட்சுமி வாக்காளர்கள் விவரம் அடங்கிய பூத் சிலிப் வழங்கினார். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக சிலிப் வழங்கும் பணி துவங்கி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் குளறுபடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் வழங்கப்பட்ட சிலிப்களை திரும்ப பெரும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.