சென்னை: சென்னையில் கொரோனோ தொற்று பாதிப்பு உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 690 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அந்த பட்டியலையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டு இருக்கிறது.
பொதுவாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படும். அந்த பகுதிகளுக்கு ஊரடங்கு காலத்தில் அரசு அறிவித்துள்ள தளர்வுகள் எதுவும் பொருந்தாது.
குறிப்பாக சொல்லப்படுமானால் வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதே போல அங்கு வசிக்கும் மக்களுக்கும் வெளியே செல்ல அனுமதி கிடையாது.


இந் நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் சமீபத்திய பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. புதிய பட்டியலின் அடிப்படையில் பார்த்தால் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளது.




சென்னையின் 15 மண்டலங்களில் அதிகபட்சமாக, திரு.வி.க.நகரில் 124 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக ராயபுரத்தில் 116 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.



தேனாம்பேட்டை- 78, வளசரவாக்கம் – 53, தண்டையார்பேட்டை- 52, அம்பத்தூர்-51, அண்ணாநகர் – 45 ஆகிய எண்ணிக்கையிலான பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.


அதே போல், மணலி – 33, திருவொற்றியூர் – 32, மாதவரம் – 24, அடையாறு- 23, கோடம்பாக்கம் – 22, சோழிங்கநல்லூர் – 14, பெருங்குடி- 13, ஆலந்தூர் – 10 ஆகிய எண்ணிக்கையிலான பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியின் இந்த புதிய பட்டியல் மூலம் நகரில் கொரோனா தொற்றின் பாதிப்பு முன்பு இருந்ததை விடவும் வலுவாக இருக்கிறது என்பதை காணலாம்.