சென்னை: மத்திய அரசின் ரூபாய் நோட்டுக்கு எதிராக மக்களுக்காக போராடிய பெண்களின் மார்பகங்களை குறிவைத்தும், ஆபாசமாக பேசியும் காமவெறியுடன் நடந்துகொண்ட சென்னை போலீசாருக்கு எதிரான குரல்கள் ஓங்கி வருகின்றன.

பிரதமர் மோடி அரசின் ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு,  250 அப்பாவி மக்களின் உயிரைப் பறித்திருக்கிறது. மோடி அளித்த வாக்குறுதியின்படி டிசம்பர் 30-ந் தேதியுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியிருக்க வேண்டும். ஆனால் நிலைமை சீரடையவில்லை.

இதையடுத்து மக்களின் ஆதங்கத்தை, கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக கடந்த டிசம்பர் 31-ந் தேதி நாடு முழுவதும் இடதுசாரி இயக்கங்கள் போராட்டம் நடத்தின. சென்னை மேடவாக்கத்தில்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் மார்பகங்களை குறிவைத்து காவல்துறையினர் தாக்கியது கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.  இந்த காக்கி படைக்கு தலைமை வகித்த  இன்ஸ்பெக்டர் ரவி போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளை மிக கொடூரமாக தாக்கியதோடு, இனி போராட்டமே நடத்தக் கூடாது என கொலைமிரட்டலும் விடுத்திருக்கிறார்.

போலீசாரால் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை, வாக்குமூலமாக சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர் பாதிக்கப்பட்ட இடதுசாரி பெண்கள். கேளுங்கள்.. பதைபதைத்துப்போவீர்கள்.