சென்னை:
கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர் மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவரும் கட்டாயம் 14 நாட்கள் தனிப்மைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அனுமதி பெற்ற பரிசோதனை மையங்களின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஆணையர் பிரகாஷ் தலைமையில் இன்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இனி வருங்காலங்களில் பரிசோதனை மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொண்டாலே, பரிசோதனை மேற்கொள்ளும் நபர் மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவரும் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றார்.

மேலும் பேசிய அவர், வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள 6000 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ள அனைத்து வழிமுறைகளையும் தவறாமல் பரிசோதனை கூடங்கள் பின்பற்ற வேண்டும். பரிசோதனைக் கூடங்களில் ஐசிஎம்ஆர் வழிமுறைகளை பின்பற்றி அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அங்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடைகளை வழங்க வேண்டும் கூறினார்.

பரிசோதனை மையங்களின் வாயில்களில் ஐசிஎம்ஆர் வழிமுறைகளை பின்பற்றி பதாதைகள் வைக்கப்பட வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீடுகளுக்கு சென்று கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை சேகரிக்கும் பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதா? என்பதை அந்தந்த பரிசோதனை மையங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.