சென்னை: தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம்  தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  தற்போதைய நிலையில், நீர் மட்டம் 7 டி.எம்.சி.யாக இருப்பதாகவும்,  செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து  கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்துவரும் ஏரிகளான பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் நடப்பாண்டு பெய்து வரும் மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.  மேலும்,  ஆந்திர மாநில அரசுடன் செய்து கொண்ட கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல் தவணைக்கான தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால்,   ஏரிகளின் நீர்மட்டம் தற்போது 7 டி.எம்.சி.யை தாண்டி உள்ளது.

இதுகுறித்து கூறிய பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள்,  தற்போதைய நிலவரப்படி பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளிலும் 7 ஆயிரத்து 97 மில்லியன் கன அடி (7.09 டி.எம்.சி.) நீர் இருப்பு உள்ளது.  கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3 ஆயிரத்து 164 மில்லியன் கன அடி (3.16 டி.எம்.சி.) நீர் மட்டுமே இருந்தது.

தற்போதைய நிலையில், பூண்டி ஏரிக்கு 766 கனஅடியும், சோழவரம் 69 கன அடி, புழல் 101 கன அடி மற்றும் செம்பரம்பாக்கம் 196 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

அதேநேரம்  சென்னை மக்களின்  குடிநீர் தேவைக்காக பூண்டியில் இருந்து 25 கனஅடி, புழல் 124 கனஅடி, செம்பரம்பாக்கத்தில் இருந்து 81 கன அடி வீதம் நீர் திறக்கப்படுகிறது.

கடந்த 24 மணிநேரத்தில் பூண்டி நீர் பிடிப்பு பகுதியில் மட்டும் 4.2 மில்லி மீட்டர் அளவு மழை பெய்து உள்ளது.

11 ஆயிரத்து 257 மில்லியன் கன அடி (11.25 டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட 4 ஏரிகளிலும் சேர்த்து தற்போது 7 ஆயிரத்து 97 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது. ஆக 63.1 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. மேலும்,  கால்வாய்கள் மூலம் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து இருப்பதால்,  செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 4 ஏரிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது

தற்போது உள்ள நீரின் அளவை பொறுத்த வரையில் சென்னையில் அடுத்த 7 மாதங்களுக்கு தேவையான குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுவதாகவும்,  இனிவரும் நாட்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், இந்த ஆண்டு தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்பு இல்லை.  பொதுமக்கள் ஏரிகளை பார்வையிட செல்வதை தற்காலிகமாக தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.