சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நீட்டித்து வந்தது. வங்கக்கடலில் உருவான புல்புல் புயலால் தமிழகத்தில் பாதிப்பு இல்லை என்றும், அடுத்த இரு தினங்களுக்கு பெரிதாக மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதேநேரம் காற்றின் திசை மாறுபாடு காரணமாக சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அசோக்நகர், வடபழனி, கே.கே.நகர், திருவல்லிக்கேணி, தாம்பரம், பல்லாவரம், மடிப்பாக்கம், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.