சென்னை

சென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டது.

சென்னை அடையாறு இந்திரா நகரில் இந்தியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று முற்பகல் வங்கிக்கு வந்த ஒரு நபர், துப்பாக்கியைக் காண்பித்து வாடிக்கையாளர் ஒருவரை மிரட்டி அவரிடம் இருந்த பணத்தை பிடுங்கினார்.

பிடிபட்ட கொள்ளையன்

அந்த துப்பாக்கி நபரை பிடிக்க பிற வாடிக்கையாளர்கள் முயல, துப்பாக்கியை காண்பித்து மிரட்டிய படியே வங்கிக்கு வெளியில் வந்தார்.

இதற்குள் சாஸ்திரி நகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே அவர்கள் வந்து துப்பாக்கி நபரை மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்து ஆறு லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் அந்த நபர் பெயர் சுனிப் யாதவ் (30) பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. சென்னையில் கேளம்பாக்கத்தில் தற்போது வசித்து வருவதாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.

இக் கொள்ளையில் சுனிப் யாதவ் தவிர வேறு நபர்களும்   ஈடுபட்டிருக்கலாம் என்று  கால்துறையினர் கருதுகின்றனர்.