சென்னை: கொரோனா லாக்டவுன் காலத்திலும் தொழிற்சாலைகள் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என தமிழக மின்வாரியம் வெளியிட்ட உத்தரவை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்துள்ளது.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டு, தொழிலாளர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில்,   ஊரடங்கு காலத்தில் 90 % மின் கட்டணத்தை செலுத்தும்படி தொழிற்சாலைகளுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதை எதிர்த்து, தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்குகளை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் காணொலி காட்சி மூலம் விசாரித்தார்.

அப்போது, கொரோனா  ஊரடங்க காலகட்டத்தில் தொழிற்சாலைகள் இயங்காத நிலையில், அதிகபட்சமான மின் கட்டணத்தை செலுத்த கூறுவது சட்டவிரோதமானது.

மின் வாரியத்தின் இத்தகைய நடவடிக்கைகள் தொழிற்சாலைகளை மூடும் நிலைக்கு தள்ளிவிடும்

தொழிற்சாலைகளிடமிருந்து அதிகபட்ச கட்டணத்தை வசூலிக்கும் மின் வாரியம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் நடவடிக்கை,  பொன் முட்டையிடும் வாத்தை ஒரே நாளில் அறுப்பது போன்றது

கொரோனா பொதுமுடக்கம் முடியும் வரை தொழில்சாலைகளில் பயன்படுத்தப்படும் உயர்மின் அழுத்த இணைப்புகளுக்கு 20 சதவீத கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் .

கூடுதலாக கட்டணம் வசூலித்திருந்தால் அந்த தொகையை வரும் மாதங்களின் மின் கட்டணத்தில் சரிபடுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும், 90% மின் கட்டணத்தை செலுத்தும்படி  மின்வாரியம் வெளியிட்ட உத்தரவை ரத்து செய்த உயர்நீதி மன்றம்,  உயரழுத்த மின்சாரம் பயன்படுத்தும் ஆலைகளுக்கு குறைந்தபட்ச மின் கட்டணமே வசூலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.