சென்னை:

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கை விசாரணை செய்துவந்த நீதிபதிகள்  அமர்வில் இருந்த இரண்டு நீதிபதிகள் திடீரென விலகினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த  தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலையால் அந்த பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டதாக அந்த பகுதி மக்கள் நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வந்தனர்.கடந்த ஆண்டு நடைபெற்ற மாபெரும் போராட்டத்தின்போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 அப்பாவிகள் பலியானதை தொடர்ந்து  ஸ்டெர்லைட் ஆலை கடந்த ஆண்டு மூடப்பட்டது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலைய மீண்டும் திறக்கக்கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்த வழக்கை ஏற்க மறுத்த நீதிமன்றம்  சென்னை உயர்நீதி மன்றத்தை நாட அறிவுறுத்தியது.

அதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆலையின் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தி ருந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சசிதரன், நீதிபதி ஆஷா கொண்ட அமர்வு விசாரணை செய்து வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கில் இருந்து நீதிபதி சசிதரன் விலகுவதாக அறிவித்தார். அவரை அடுத்து நீதிபதி ஆஷாவும் விலகுவதாக அறிவித்தார். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கில் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்ததால் இந்த வழக்கை விசாரிக்கவில்லை என்று நீதிபதி சசிதரன் இந்த வழக்கில் இருந்து விலகியதற்கு காரணம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் சசிதரன், ஆஷா அமர்வு பரிந்துரை செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது