சென்னை: ஊரடங்குக்கு முன்னதாக கோயம்பேட்டில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு ஒருநாள் வாடகை மட்டும் செலுத்தினால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால்  ஊரடங்கு அறிவிக்கப்பட்ட சமயத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் சென்ற பொதுமக்கள் வாகனங்களை பேருந்து நிலைய வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்திச் சென்றனர்.
மொத்தம் 145 நான்கு சக்கர வாகனங்களும், 1,359 இரு சக்கர வாகனங்களும் இப்போது அங்கு உள்ளன. அந்த வாகனங்களை திரும்ப எடுக்க செல்லும் பொது மக்களிடம் இந்த வாகனங்களுக்கு 55 நாட்களுக்கும் முழுநேர வாடகையும் வசூலிக்கப்படுவதாக தெரிகிறது.
இந் நிலையில், துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், அறிவுறுத்தலின் படி இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் எதுவாக இருப்பினும், அவற்றிற்கு ஒருநாள் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரருக்கு கடிதம் மூலம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சிடிஎம்ஏ  உத்தரவிட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் ஒரு நாள் கட்டணம் மட்டும் செலுத்தி தங்கள் வாகனங்களை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.