சென்னை:

சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிரானக தொடரப்பட்ட வழக்கில், வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் வரும் 8ந்தேதி (திங்கட்கிழமை) தீர்ப்பு வழங்குகிறது.

சென்னை-சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில்  8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. இந்த திட்டத்துக்காக  சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஆயிரத்து 900 ஹெக்டர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு  நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது.

இந்த திட்டத்திற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதன் காரணமாக அரசியல் கட்சிகள் பொதுமக்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தன.

இந்த நிலையில், 8வழி சாலைத்திட்டத்துக்கு  தடை விதிக்க கோரியும், திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் ஐந்து மாவட்ட விவசாயிகள், தருமபுரி எம்.பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அமர்வு விசாரணை செய்து வந்தது. வழக்கின் விசாரணையின்போது,  நிலங்களை கையகப்படுத்த  இடைக்கால தடை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்தும் பல கட்ட விசாரணைகள் நடைபெற்ற வந்தன.

இந்த திட்டம் தொடர்பான அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள்  தள்ளிவைத்தனர். மேலும், ஜனவரி 4ஆம் தேதிக்குள் எழுத்துபூர்வ வாதங்களை அனைத்து தரப்பிலும் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், 8 வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கில்,  வரும் திங்கட்கிழமை காலை 10.30 மணி அளவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.