சென்னை:

சென்னையில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ஏப்ரல்15-க்கு பின்னர் விமானத்தில் செல்ல திட்டமிட்டு உள்ளீர்களா? உங்களுக்கான டிக்கெட் விலை மிகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 14ம் தேதி மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் நிலையில், ஏப்ரல் 15 முதல் ரயில் மற்றும் விமானப் பயணங்களுக்கு முன்பதிவு செய்யலாம் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.

தற்போதைய நிலையில், சரக்கு ரயில்கள் தவிர, அனைத்துவகை பயணிகள் ரயில்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. விமானப் பயணங்களும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் மொத்தம் 9000 சரக்கு ரயில்கள் எப்போதும் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே, பயணிகள் ரயில்களைப் பொறுத்தவரை, ஏப்ரல் 15 முதல் முன்பதிவுகள் துவங்கும் என்று கூறப்படுகிறது. அதேசமயம், மார்ச் 22 முதல் ஊரடங்கில் இருந்ததால், ஊழியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பி, அனைத்துப் பணிகளும் மீண்டும் முறையாக முழு வேகத்தில் துவக்கப்படுவதற்கு சிறிது நாட்கள் அவகாசம் எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ மற்றும் கோஏர் போன்ற தனியார் விமான நிறுவனங்கள், தங்களின் உள்நாட்டு விமான சேவைகளுக்கான ஆன்லைன் முன்பதிவை ஏப்ரல் 15 முதல் துவங்க உள்ளன.

இந்நிலையில், சென்னையில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ஏப்ரல்15-க்கு பின்னர் விமானத்தில் செல்ல நீங்கள் திட்டமிட்டு இருந்தால், அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டியிருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.