சென்னை: ஹாங்காங்கில் தற்போது நடந்துவரும் பிரச்சினைகள், சென்னையிலிருந்து கிழக்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுலா செல்வோரை பாதித்துள்ளது.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சுதந்திர தினத்தை தொடர்ந்த விடுமுறை நாட்களை செலவிட, ஹாங்காங் மற்றும் மக்காவ் ஆகிய நகரங்களுக்கு விமான டிக்கெட் புக்கிங் செய்தவர்கள், தற்போது தங்களின் பயணத்திட்டத்தை இந்தோனேஷியா, பாலி, மலேசியா மற்றும் சிங்கப்பூர் வழியாக மாற்றி வருவதால், அதற்கான கூடுதல் தொகையை செலவழிக்கின்றனர்.

சீனாவின் சில பகுதிகளுக்கு, ஹாங்காங் வழியாக செல்வதற்கு திட்டமிட்டவர்கள், தற்போது கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூர் வழிகளுக்கு மாறி வருகின்றனர்.

ஹாங்காங்கிலிருந்து விமானங்கள் இயங்கத் தொடங்கினாலும், அந்த வழியைத் தவிர்க்குமாறு பயண ஆலோசனைகள் வழங்கப்பட்டிருப்பதால், மக்கள் தொடர்ச்சியாக தங்களின் பயண வழியை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

தற்போது, டோக்கியோ மற்றும் பீஜிங் ஆகிய இடங்களுக்கான 1 அல்லது 2 வாரங்களுக்கான முன்கூட்டிய டிக்கெட் பதிவுக்கான கட்டணம் முறையே ரூ.60,000 மற்றும் ரூ.57,000. இது வழக்கத்தைவிட கூடுதலாகும். ஹாங்காங் வழியாக விமானம் மாறினால் கட்டணம் குறையும். ஆனால், கோலாலம்பூர் வழியாக செல்வதாலேயே இந்த சிக்கல் என்று கூறப்படுகிறது.