முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்த வருவார்கள் என்பதால், சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்கு அரசியல் கட்சிகள் சார்பில் அஞ்சலி செலுத்துவதற்காக நாளை காலை மிக அதிக எண்ணிக்கையில் ஊர்வலமாக செல்ல உள்ளனர். இதனை முன்னிட்டு காமராஜர் சாலை மற்றும் வாலாஜா சாலையில் சூழ்நிலைக்கு தக்கவாறு வாகனங்கள் அனுமதிக்கப்படாது. அப்போது கீழ்கண்ட போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

i. வடக்கில் இருந்து வரும் வாகனங்கள் போர் நினைவு சின்னம் சந்திப்பில் திருப்பப்பட்டு, கொடிமரச்சாலை, அண்ணாசாலை வழியாக சென்று தங்களது இலக்கினை அடையலாம்.

ii. முத்துசாமி பாயின்டில் இருந்து வரும் வாகனங்கள், கொடிமரச்சாலைக்கு செல்ல அனுமதிக்காமல், அண்ணாசாலை வழியாக சென்று தங்களது இலக்கினை அடையலாம்.

ii. நேப்பியர் பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள், ஆடம்ஸ் பாயின்டில் திருப்பப்பட்டு, சுவாமி சிவானந்தா சாலை வழியாக சென்று தங்களது இலக்கினை அடையலாம்.

iv. தெற்கில் இருந்து வரும் வாகனங்கள் காந்தி சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை வழியாக சென்று தங்களது இலக்கினை அடையலாம்.

v. விவேகானந்தர் இல்லம் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலை சந்திப்பில் திருப்பப்பட்டு, பாரதி சாலை, இராயப்பேட்டை, மணி கூண்டு வழியாக சென்று தங்களது இலக்கினை அடையலாம்.

vi. அண்ணாசாலையில் வரும் வாகனங்கள் சுவாமி சிவானந்தா சாலை மற்றும் வாலாஜா சாலை ஆகியவற்றில் செல்ல அனுமதிக்காமல், நேருக்கு நேராக அண்ணாசாலையில் சென்று தங்களது இலக்கினை அடையலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.