சென்னை: காலியாக இருந்த சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி மற்றும்  நாகை மாவட்டத்தில்  ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான பணி நியமன ஆணையை கவர்னர் பன்வாரிலால் வழங்கினார்.
சென்னை பல்கலைக்கழகம், நாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக இருந்தன.  இதற்கு தகுதியானவர்களை நியமிக்க தேடுதல் குழு அமைக்கப்பட்டு, தலா 3 பேரை தேர்வு செய்து கவர்னருக்கு பரிந்துரை செய்தது.
இந்த பட்டியலை பரிசீலித்த கவர்னரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் எஸ்.கவுரியையும், மீன்வள பல்கலைக்கழக துணை வேந்தராக ஜி.சுகுமாரையும் நியமித்து உத்தரவிட்டார்.
இதற்கான நியமன ஆணையை ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.
இவர்கள் பொறுப்பேற்ற நாளில் இருந்து 3 ஆண்டுகள் பணியாற்ற முடியும்.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.கவுரி, சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்று 37 ஆண்டுகள் ஆசிரியர் பணியில் உள்ளார். இவர், முன்னதாக சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக மானியக்குழுவின் கீழ் செயல்பட்டு வரும் மல்டி மீடியா கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
நாகப்பட்டினம் மாவட்டம் டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைகழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சுகுமார்,  துறை சார்ந்து 33 வருடங்கள் பணி அனுபவம் கொண்டவர.   தூத்துக்குடி மீன்வள கல்லூரியில் ஃபிஷ் பிராசஸிங் டெக்னாலஜி துறை தலைவராக இருந்த நிலையில் தற்போது துணிவேந்தராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு துறை சார்ந்து பல புதிய முயற்சிகளை முன்னெடுத்துள்ளார்.