சென்னை: தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகம், புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும். மதுரை, தூத்துக்குடி, திருச்சி, ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது. எனவே, மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த பகுதியில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.