சென்னை:
சென்னையில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.8 சதவிகிதமாக குறைந்துள்ளது என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்து உள்ளார்.

அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

தமிழகத்தில் முதன்முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட, அதிலிருந்து குணமாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. சென்னையில் நேற்று  1,203 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், மொத்த  பாதிப்பு எண்ணிக்கை 71,220 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
இதுகுறித்த செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர்,  ஜூலை 7 ஆம் தேதி சென்னையில் கொரோனா பாதிப்பு  விகிதமாக  11.87% ஆக சரிந்து இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
மாநிலம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின்  விகிதம் கடந்த ஜூன் மாதத்தில்  24.2%  ஆக இருந்து வந்த நிலையில், தற்போதைய (ஜூலை) மாதத்தில், பாதிப்பு  18.2% ஆக குறைந்து இருப்பதாகவும்,  ஜூலை 7 ஆம் தேதி நகரத்தில் 1203 வழக்குகள் பதிவாகி உள்ளதாக கூறினார்.
மேலும், நாடு முழுவதும்  புதிதாக 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னை யில் பாதிப்பு  1203 ஆகக் குறைந்தது. மேலும் 10,139 சோதனைகள் செய்யப்பட்டன, ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தது போல தற்போது சென்னையில் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது, அதே வேளையில்  சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் 2413 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.  அதிகபட்சமாக மதுரையில் 334 பேருக்கு கொரோனா பதிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இன்று தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உண்ணவும் நினையாது, உறங்கவும் முனையாது, கொரோனாவிலிருந்து தமிழகத்து மக்களை பூரணமாய் மீட்கும் வகையில் தொடர்ந்து இரவு, பகல் பாராது போராடி வருகிறார் எளிமை சாமானியர் எடப்பாடி பழனிசாமி.
கொரோனா கொள்ளை நோய்க்கு எதிராக பெரும் போராட்டத்தை நிகழ்த்திவரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நல்ல அபிப்ராயத்தை பொறுக்க முடியாமல், வகையற்ற வாதங்களை வார்த்தைகளாக்கி அறிக்கைகளை நித்தம் ஒன்றாய் விடுத்து வருகிறார் மு.க.ஸ்டாலின். மத்திய அரசால், நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் சீர்மிகு நகரங்கள் முன்னோடி திட்டத்தின் கீழ் அதிக அளவில் சீர்மிகு நகரங்கள் தேர்வு செய்யப்பட்டதில், தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. இதனை தமிழகத்திற்கு பெற்று தந்தவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான்.
கடந்த 9 ஆண்டுகளில் இந்திய அளவில் உள்ளாட்சித்துறை அதிகமான சாதனைகளை படைத்துள்ளது. இதே காலக்கட்டத்தில் உள்ளாட்சித்துறையின் சார்பாக 123 தேசிய விருதுகளை வென்று தாய் தமிழகத்திற்கு உள்ளாட்சித்துறை தலைப்பாகை சூட்டியிருக்கிறது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவிலிருந்து தமிழக மக்களை காத்திட அல்லும்பகலும் அயராது உழைத்து வரும் எங்கள் எடப்பாடி பழனிசாமியின் நல்லாட்சி தரத்தை அனைத்து அமைப்புகளும் பாராட்டி மகிழ்வதை காண பொறுக்காது, அறிக்கைகளை விட்டு மு.க.ஸ்டாலின் காட்டுகிற பூச்சாண்டிகளுக்கு எல்லாம் நாங்கள் ஒருபோதும் அஞ்ச மாட்டோம். மு.க.ஸ்டாலின் சுமத்தும் எந்த குற்றச்சாட்டுகளையும் நான் எதிர்கொள்ளத் தயார்.
தமிழகத்தில் சிறப்பான திட்டங்களை அனைத்து துறைகளிலும் செயல்படுத்துவதால், மக்கள் மன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு பெருகி வரும் ஆதரவை பொறுத்துக்கொள்ள முடியாமல், குறிப்பாக விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. பெற்ற இமாலாய வெற்றிக்குப்பிறகு, இனி தமிழ்நாட்டு அரசியலில் தி.மு.க.விற்கு எதிர்காலம் இல்லை என்பது தெளிவாக புரிந்து விட்டதால், அரசின் மீது பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளை ஆதாரமில்லாமல், வெளியிட்டு மு.க.ஸ்டாலின் உச்சகட்ட விரக்தியை வெளிப்படுத்துகிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.