வாஷிங்டன்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் டி ஏ சி ஏ என்னும் பொதுமன்னிப்பை ரத்து செய்ததை தொடர்ந்து  அவர் இனிஅமெரிக்க நாட்டிலேயே உள்ள சிகாகோ நகருக்கு  வரக்கூடாது என சிகாகோ மேயர் தடை விதித்துள்ளார்.

முந்தைய ஒபாமா அரசு டி ஏ சி ஏ (Deferred Action for Childhood Arrivals  immigration policy) என்னும் பொது மன்னிப்பை வழங்கி இருந்தது.  இதன்படி அமெரிக்காவில் தகுந்த ஆவணமின்றி குடியேறியவர்கள் 16 வயதுக்கு குறைவாக இருந்தால் அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி நாடு கடத்தப்பட மாட்டார்கள்.  இதை டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஐந்தாம் தேதி ரத்து செய்துள்ளார்.  இதனால் 8 லட்சம் பேர் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.  இந்த ரத்தின்படி அவர்கள் இன்னும் ஆறு மாதத்துக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்படுவார்கள்

சிகாகோ மேயர் ராஹ்ம் இமானுவெல்

இதற்கு அமெரிக்காவில் அனைத்து மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.  அனைவரும் இணைந்து புரூக்ளின் ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.  நீயூயார்க்கின் அட்டர்னி ஜெனரல் எரிக் ஸ்சனிடெர்மன், “இந்த ரத்து மிகவும் கொடூரமானது.  மனித நேயத்தை குழி தோண்டி புதைக்கும் ஒரு குறுகிய நோக்கம் கொண்டது” என வர்ணித்துள்ளார்.

சிகாகோவின் மேயர்  ராஹ்ம் இமானுவெல் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிகாகோவுக்குள் நுழைய ட்ரம்புக்கு தடை விதித்துள்ளார்.  சிகாகோ நகரம் ட்ரம்ப் இல்லாத நகரம் என கூறியுள்ள அவர்,  இந்த ரத்தை ஒரு போதும் சிகாகோ மட்டும் அல்ல, அமெரிக்கா முழுமையுமே அங்கீகரிக்காது என கூறி உள்ளார்.

ஒரு நாட்டின் அதிபருக்கு அந்நாட்டில் உள்ள ஒரு நகருக்கே வர தடை விதிப்பது சரித்திரத்திலேயே இது முதல் முறையாகும்.