டில்லி:

உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்து உள்ளன. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விசாரணையையும் நடைபெற்று வருகிறது.

மருத்துவமனைக்கு திரவ ஆக்ஸிஜன் வினியோகித்து வந்த தனியார் நிறுவனத்துக்கு மருத்துவமனை நிர்வாகம் சுமார் ரூ.69 லட்சம் வரை பாக்கி வைத்திருப்பதால் கடந்த 4ந் தேதி முதல் ஆக்சிஜன் வினியோகத்தை அந்த நிறுவனம் நிறுத்தி உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக உ.பி. அரசு பல்வேறு நிலைகளில் விமர்சனங்களை எதிர்க்கொண்டு வருகிறது.

மருத்துவமனையை ஆய்வு செய்த மத்திய சுகதார துறை அமைச்சர் ஜே.பி. நட்டா நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மத்திய அரசு முடிந்தவரையில் மாநில அரசுக்கு உதவி செய்து வருகிறது. உயிரிழப்பு காரணமாக பிரதமர் மோடி கவலை கொண்டுள்ளார், தொடர்ந்து நிலவரத்தை கேட்டு வருகிறார். கோரக்பூருக்காக மத்திய அரசு தீவிர நடவடிக்கையை எடுக்கிறது.

சிறப்பான மருத்துவ சேவைக்கு சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய 3 நபர்கள் கொண்ட குழுவானது இங்கு வந்து உள்ளது. என்சிபாலிட்டிஸ் குறித்து யோகி ஆதித்யநாத் நாடாளுமன்றத்திலும் பேசியுள்ளார். அவருடைய அறிவுரையின் பெயரில் குழந்தைகளுக்கான நோய்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய கோரக்பூரில் ரூ. 82 கோடி செலவில் பிராந்திய ஆய்வு மையம் அமைக்கப்படும்’’ என்றார்.

‘‘பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் நோயாளிகள் வருவதாகவும், அவர்களில் 500 பேர் தங்கி சிகிச்சை பெறுகின்றனர்’’ என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.