சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவசியம். மக்கள் ஒத்துழைப்பு இல்லையெனில் கொரோனாவை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை.

கூடியவரை, அவசியமின்றி வெளியில் செல்வதனை மக்கள் அனைவரும் தவிர்க்க வேண்டும். கொரோனாவால் நம் இயல்பு வாழ்க்கை மற்றும் பொருளாதாரம் பாதிப்படைந்து உள்ளது.  ஜூன் 4ம் தேதி வரை தமிழகத்தில் 5.5 லட்சம் பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.

நாட்டிலேயே அதிக அளவாக 72 மையங்களில் தினமும் சராசரியாக 13 ஆயிரம் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த முகக்கவசம், தனிமனித இடைவெளி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும்.

கொரோனா உயிரிழப்பு சதவீதம் இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே தமிழகத்தில் தான் மிக குறைவு.  இதேபோன்று சிகிச்சை பெற்று குணம் அடைந்தோர் சதவீதம் ஒப்பீட்டு அளவில் தமிழகத்தில் தான் அதிகம் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.