சென்னை: கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட வேண்டிய அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிரித்து வருகிறது. அதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த 19ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மதுரையில் நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலாக உள்ளது.

இந்நிலையில் நாளை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். காணொலி வாயிலாக இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள்,  ஊரடங்கு குறித்து கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிகிறது.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் மற்றும் மதுரையில் அமல்படுத்தப்பட்டு உள்ள முழு ஊரடங்கை, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பிற மாவட்டங்களிலும் விரிவுபடுத்துவது தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.