சென்னை: ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்

இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.  அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:

ஈரானின் பல்வேறு பகுதிகளில் 650 தமிழக மீனவர்கள் உள்பட அனைத்து இந்திய மீனவர்களும்  சிக்கி உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி நான் எழுதிய ஒரு கடிதத்தில், இந்த மீனவர்கள் அனைவரும் பத்திரமாக தாயகம் திரும்புவதற்கு உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தேன்.

ஈரான் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்த மீனவர்கள் சார்பிலும் அவர்களது குடும்பத்தினர் சார்பிலும் அவர்களுக்கு உணவு குடிநீர் மற்றும் இதர அடிப்படை தேவைகளை செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன.

எனவே உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கிடைப்பதை உறுதி செய்து அவர்கள் தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.