சென்னை: தமிழகத்தில் நல்லாசிரியர் விருதுக்கு 375 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையைச்சேர்ந்த 15 ஆசிரியர்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தார்.

ஆசிரியர் தின விழாவையொட்டி பள்ளிகளில் சிறப்பான முறையில் பணியாற்றி தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு  செய்யப்பட்ட 375 ஆசிரியர்களில், சென்னை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 15 ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகள், வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 10,000 ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வழங்கி ஆசிரியர் பெருமக்களை கவுரவித்தார்.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  மாணாக்கர்களின் அறிவுக் கண்ணை திறக்கும் ஆசிரியராகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கி, இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்து, ஆசிரியர் சமுதாயத்திற்கு பெரும் சிறப்பினை சேர்த்த தத்துவ மேதை டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் திங்கள் 5-ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சிறந்த கல்வித் தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு “டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது” வழங்கி தமிழ்நாடு அரசு கௌரவித்து வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டு சிறந்த முறையில் பணியாற்றிய ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் பணிபுரியும் விரிவுரை யாளர்களில் 375 ஆசிரியர்கள் நல்லாசிரியருக்கான டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் சென்னை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 15 ஆசிரியர்களுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி இன்று டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகள், வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 10,000 ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலைகளை வழங்கி கௌரவித்தார்.

அதனைத் தொடர்ந்து, இன்றே காலை 10.30 மணியளவில் பிற மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட நல்லாசிரியர்கள் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படு வார்கள். மேலும், 2020-ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை யாசிரியை இரா.சி. சரஸ்வதி மற்றும் பட்டதாரி ஆசிரியர் ஸ்ரீதிலீப் ஆகியோர் முதல்வரை இன்று சந்தித்து விருதிற்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் க. சண்முகம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாவட்டங்களில் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாவட்ட அமைச்சர் விருது வழங்கினார்.  ஆட்சியர் மற்றும் கல்வி அதிகாரிகள் முன்னிலையில், விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.