சென்னை: மத்தியஅரசு திரையரங்குகளை திறக்க பச்சைக்கொடி காட்டிய நிலையில், தமிழகஅரசு இதுவரை அனுமதி வழங்க மறுத்து வருகிறது. இந்த நிலையில், வரும் 28ந்தேதி சுகாதார நிபுணர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்த உள்ளார். அதைத்தொடர்ந்தே  திரையரங்குகளை திறப்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டன. தற்போது  ஊரடங்கில் 90 சதவிகிதம்  தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், திரையரங்குகளை திறக்கவும் மத்திய அரசு அனுமதி அளித்த்துள்ளது. அதன்படி நவம்பர் 15ந்தேதிமுதல் தியேட்டர்களை திறக்கலாம் என்று அறிவித்த நிலையில், இது தொடர்பாக மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம் என தெரிவித்து,  அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.
மத்தியஅரசின் உத்தரவைத் தொடர்ந்து,  புதுச்சேரி உள்பட பல மாநிலங்கள் திரையரங்குகளை திறந்துவிட்டன. ஆனால், தமிழகத்தில் இதுவரை திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இது தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள் முதல்வர் எடப்பாடியை சந்தித்து மனு கொடுத்தனர்.
இந்த நிலையில், தமிழக முதலவர் வரும் 28ந்தேதி சுகாதாரத்துறை நிபுணர்களுடன் கலந்தாலோசனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.  அதையடுத்தே தியேட்டர்கள் திறப்பது மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக தமிழகஅரசு முடிவு செய்யும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதுபோல மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு , முதல்வருடன் நடைபெற்ற ஆலோசனைகூட்டத்தில் திரையரங்குகள் திறப்பது குறித்து விவாதித்தோம்.  விரைவில் திரையரங்கு திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறினார்.