பாட்னா:

பீகார் மாநிலத்தில் முசாபர்பூர்  பகுதியில் பரவி வரும் மூளைக்காய்ச்சல் நோய்க்கு இதுவரை 108 குழந்தைகள் பலியாகி உள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தை களை பார்வையிட வந்த நிதிஷ் குமாருக்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன் காரணமாக  குழந்தைகளைப் பார்க்காமல் திரும்பினார்.

கடந்த சில மாதங்களாக பீகார் மாநிலத்தில் முசாபர்புர் மாவட்டத்தில் மூளைக்காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், நோயின் பாதிப்பு தொடர்ந்து வருகிறது. இதுவரை மூளைக்காய்ச்சல் நோயால் 108 பேர் உயிரிழந்து உள்ளதாக கூறப்படுகிறது. முசாபர்பூர் நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ மனையில் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியான முசாபர்நகர் மாவட்டத்துக்கு மாநில முதல்வர்  நிதிஷ் குமார் இன்று வருகை தந்தார். இதுவரை வராமல் தற்போது வந்துள்ள நிதிஷ்குமாருக்க,  குழந்தைகளின் உறவினர்கள், மற்றும் அந்த பகதி மக்கள் கடும்  எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன் காரணமாக மருத்துவமனை வந்த நிதிஷ்குமார், சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளைப் பார்க்காமல் மருத்துவர்களுடன் சிறிதுநேரம் ஆலோசனை நடத்திவிட்டு  திரும்பினார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து பாட்னா திரும்பிய நிதிஷ்குமார், அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். அதையடுத்து,   குழந்தைகளுக்கான சிகிச்சையை தீவிரப்படுத்துவது என்றும், குழந்தைகளுக்குத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தால் அதற்குரிய செலவுகளை அரசே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், பலியான குழந்தைகளின் குடும்பத்தாருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.