சென்னை: எட்டுவழிச்சாலைத் திட்டத்தை ரத்து செய்வதாக முதலமைச்சர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது: விவசாயிகள் தமது வாழ்வுரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தொடர்ச்சியான போராட்டங்களை உறுதியாக மேற்கொண்டு வரும் நிலையில், சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றலாம் என  உச்சநீதிமன்றம்  வழங்கியுள்ள தீர்ப்பு,  விவசாயிகள் மற்றும் இயற்கை – சுற்றுச் சூழல் ஆர்வலர்களுக்கு மிகுந்த  ஏமாற்றத்தை அளித்துள்ளது.

எல்லா வகையிலும் விவசாயிகளுக்கு எதிரிகளாக மத்திய பா.ஜ.க அரசும், அ.தி.மு.க. அரசும் கூட்டணி வைத்துச் செயல்பட்டு- வளர்ச்சி என்ற போர்வையில்  விவசாயிகளை வஞ்சிக்கும் முயற்சியில் தற்போதைக்கு வெற்றி பெற்றிருந்தாலும், இரு அரசுகளுக்கும் மக்கள் மன்றம் உரிய  பாடத்தை  வாக்குச் சீட்டு மூலம் நிச்சயம் கற்பிக்கும்.

விவசாயிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டுமே தவிர, மீண்டும்  இத்திட்டத்தை நிறைவேற்ற எந்தவித முயற்சியும் செய்யக் கூடாது. ஆகவே  சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தைக் கைவிட வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இது மத்திய அரசின் திட்டம் என்று சொல்லித் தப்பித்துக்கொள்ள நினைக்கக் கூடாது. கைவிட்டு விட்டதாக வெளிப்படையாக அறிவிக்க முன்வர வேண்டும் என்றே விவசாயிகள் அனைவரும் எதிர்பார்க்கிறார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.