‘சென்னை: முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது அறிவித்தபடி, முதல்வராக பதவி ஏற்றதும்,  ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை’’ உருவாக்கப்பட்டு, அதற்கான தனி அதிகாரியும் நியிமித்தார். இந்த துறை மூலம் மூலம் 10 நாட்களில் 549 மனுக்களின் மீது நடவடிக்கை  எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தேர்தல் பரப்புரையில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’’ என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு, சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, 9-5-2021 அன்று அவரிடம் அனைத்து மனுக்களும் ஒப்படைக்கப்பட்டன.

அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 72 மரப்பெட்டிகளிலும் மற்றும் 275 அட்டை பெட்டிகளிலும் சுமார் 4 இலட்சம் மனுக்கள் இதுவரை இத்துறையில் பெறப்பட்டன. பெறப்பட்ட அனைத்து மனுக்களும் மாவட்ட வாரியாக, வகை வாரியாக பிரிக்கப்பட்டு தமிழ்நாடு மின் ஆளுமை மூலம் பராமரிக்கப்படும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இதுவரை சுமார் 70,000 மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனுவும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் தனித்தன்மையுடன் கூடிய அடையாள எண் வழங்கப்பட்டு, அடையாள எண்ணுடன் கூடிய குறுஞ்செய்தி மனுதாரருக்கு அனுப்பப்படுகிறது. மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் மற்றும் அதன் உண்மை தன்மைக்கேற்றவாறு கோ. எண். / 6 /2021 தகுதியான ஒவ்வொரு மனுவும் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உடனடி தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட அலுவலர்கள் மேற்கொள்கிறார்கள்.

இதுவரை சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர், தேனி ஆகிய ஆறு மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட 549 மனுக்களின் மீது முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் செயல்படத் தொடங்கியதை குறிக்கும் வகையில், பத்து பயனாளிகளை நேரில் அழைத்து அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நலத் திட்ட உதவிகளை இன்று வழங்கினார்.

ஆதம்பாக்கம், சென்னையைச் சேர்ந்த திருமதி. ராணி அவர்களுக்கு முதியோர் உதவித் தொகையும், பரங்கிமலை, சென்னையைச் சார்ந்த திருமதி. சூ.நித்யா அவர்களுக்கு, விதவை உதவித் தொகையும், தியாகராயநகர், சென்னையைச் சார்ந்த திரு. ரு. சத்தியநாராயணன் அவர்களுக்கு மாற்றுத் திறனாளி உதவித்தொகையும், சூளைமேடு, சென்னையைச் சேர்ந்த செல்வி. தாயாரம்மா அவர்களுக்கு முதிர் கன்னி உதவித் தொகையும், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த திருமதி. சுமதி அவர்களுக்கு தையல் இயந்திரமும், வில்லிவாக்கம், சென்னையைச் சேர்ந்த திரு.உதயகுமார் அவர்களுக்கு வாரிசு சான்றிதழும், ஆயிரம் விளக்கு சென்னையைச் சேர்ந்த திருமதி நந்தினி அவர்களுக்கு காதுகேட்கும் கருவியும், இராணிப்பேட்டை மாவட்டம் கொண்டபாளையத்தைச் சேர்ந்த திருமதி ஜெயந்தி அவர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாவும்.

இராணிப்பேட்டை மாவட்டம் வெங்குபட்டு ஊராட்சியைத் சார்ந்த திரு. முத்துராமன் அவர்களுக்கு வீடு கட்ட உதவியும், இராணிப்பேட்டை மாவட்டம், சிறுவாளைத்தைச் சார்ந்த திரு. சுபாஷ் அவர்களுக்கு சொட்டுநீர் பாசன உதவி ஆகிய நலத் திட்டங்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் இன்று வழங்கப்பட்டன. சாலை மேம்பாடு, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதி வேண்டி பொதுவான கோரிக்கைகள் வரப்பெற்றவை பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் முதற்கட்டமாக பொது கோரிக்கைகள் தொடர்பாக வரப்பெற்ற நான்கு மனுக்களின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கான ஒப்புதல் கோ. எண். 7/2021 ஆணை இன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் சம்பந்தப்பட்ட பின்வரும் துறைகளுக்கு வழங்கப்பட்டது.

அதன் விவரம் பின்வருமாறு: திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த திரு. ஆ. முனுசாமி என்பவரின் கோரிக்கையின் அடிப்படையில், அழிஞ்சிவாக்கம் கிராம ஊராட்சியில் அங்கன்வாடிமையக் கட்டிடம் ரூ.10.1 இலட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கு அனுமதி ஆணையும், திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த திரு. முருகன் என்பவரின் கோரிக்கையை ஏற்று, ஆமூர் ஊராட்சி, சித்தேரி கால்வாயில் தடுப்பணை கட்டுவதற்கு ரூ.4.6 இலட்சத்தில் அனுமதி ஆணையும், இராணிப்பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த திரு. குணசேகரன் என்பவரின் கோரிக்கையின் அடிப்படையில், அசநெல்லிகுப்பம் கிராமம், சிமெண்ட் சாலை அமைப்பதற்கு ரூ.1.89 இலட்சத்தில் அனுமதி ஆணையும்.

இராணிப்பேட்டை மாவட்டம், கல்மேல்குப்பம் ஊராட்சியைச் சேர்ந்த திரு. புவனேஸ்குமார் என்பவரின் கோரிக்கையின் அடிப்படையில், எருக்கம்தொட்டி கிராமம், பிள்ளையார் கோவில் தெருவில் குடிநீர் குழாய் அமைத்திட ரூ.1.1 இலட்சம் அனுமதி ஆணை ஆகிய நலத்திட்டங்களுக்கான ஆணைகள் இன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டன.

இதேபோல், இத்திட்டத்தின்கீழ் பெறப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தையும் முறையாக ஆய்வு செய்து, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென இத்துறை அலுவலர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கினார்கள். இந்நிகழ்வில் தலைமைச் செயலாளர் திரு. வெ. இறையன்பு, இ.ஆ.ப.,’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறையின் சிறப்பு அலுவலர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப., மற்றும் இதர அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.