முதல்வரின்  உடல்நிலை குறித்து பேசியதற்காக கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:,
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பேசியதற்காக கோவையைச் சேர்ந்த  வங்கி ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் இத்தகைய கைதுகள் எதையோ திசை திருப்பவும், யாரையோ அச்சுறுத்தவும் செய்யப்படுகின்றனவோ என்ற ஐயம் எழுகிறது.
உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதா விரைந்து குணமடைந்து வழக்கமான பணிகளைத் தொடர வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த தமிழக மக்களின் விருப்பமாக உள்ளது. கட்சி எல்லைகளைக் கடந்து அனைவருமே முதலமைச்சர் நலம் பெற வேண்டுகின்றனர். இவற்றைத் தாண்டி முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்திகள் ஒருகட்டத்தில் பரவின.

ஜெயலலிதா - ராமதாஸ்
ஜெயலலிதா – ராமதாஸ்

எனினும், கடந்த 6-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனை விரிவான மருத்துவ அறிக்கையை வெளியிட்ட பிறகு வதந்திகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து விட்டது. ஆனாலும், முதலமைச்சரின் உடல்நிலை குறித்து பொதுமக்கள் உரையாடுவது தொடர்கிறது. இது இயல்பான ஒன்று தான். இதற்காக வழக்குப் பதிவு செய்து மக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வது என்பது சிறுபிள்ளைத்தனமான செயலாகும்.
முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளிலேயே அவரது உடல்நிலை குறித்த உண்மை நிலையை மக்களுக்கு விளக்கி இருந்தால், முதலமைச்சரின் உடல்நிலை என்பது விவாதத்திற்குரிய பொருளாக இல்லாமல், நலம் பெற வேண்டுதலுக்குரிய பொருளாக மாறியிருக்கும்.
முதலமைச்சரின்  உடல்நிலை குறித்து  5 நாட்களாக எந்த மருத்துவ அறிக்கையும் வெளியிடப்படாத நிலையில், ஒவ்வொருவரும் தாங்கள் கேள்விப்பட்ட தகவல்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை தடுக்க முடியாது.
உள்நோக்கத்துடன் முதல்வரின் உடல்நிலை குறித்தும், மாநிலத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் திட்டமிட்டு வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாதது. ஆனால், முதலமைச்சரின் உடல்நிலை குறித்து வங்கியில் பேசிக் கொண்டிருந்தார்கள், தெருமுனையில் பேசிக் கொண்டிருந்தார்கள் என்று அதிமுகவினர் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் கைது செய்வது அரசியல் பழிவாங்கலுக்கும், அடிப்படை மனித உரிமைகள் நசுக்கப்படுவதற்கும், ஜனநாயக படுகொலைக்கும் வழி வகுத்துவிடும்.
எனவே, முதலமைச்சரின் உடல்நிலை குறித்து பேசியதற்காக கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். முதலமைச்சரின் உடல்நிலை குறித்த  உண்மைகளை அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கையாக தினமும் வெளியிட்டு முதலமைச்சரின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவுவதை அரசு தடுக்க வேண்டும்” என்று தனது அறிக்கையில் ராமாதாஸ் தெரிவித்துள்ளார்.