அலைக்கழித்த டாக்டர்கள்.. தாயின் மடியில் மடிந்த குழந்தை..


பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள ஷாகோபர் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரின் 2 வயதுக் குழந்தைக்கு இரு தினங்களுக்கு முன்பு லேசான காய்ச்சல் இருந்தது.

பின்னர் சளி, இருமல் என நோயின் தாக்கம் அடுத்த கட்டத்துக்குச் சென்றதால் உள்ளூர் டாக்டரிடம் காட்டியுள்ளனர்.

அந்த டாக்டர், ’ ஜெகனாபாத் அரசு மருத்துவமனைக்குக் குழந்தையைக் கொண்டு செல்லுமாறு கூறியுள்ளார்.

வாகனங்கள் எதுவும் ஓடவில்லை.

அந்த ஊரில் ஆம்புலன்சும் கிடையாது.

டெம்போ ஒன்றைப் பிடித்து குழந்தையின் பெற்றோர், ஜெகனாபாத் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்துள்ளனர்.

கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் பிஸியாக இருந்த டாக்டர்கள் குழந்தையைப் பார்க்கக்கூடவில்லை.

‘’ பாட்னாவில் உள்ள  அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போ’’ என்று அந்த அப்பாவி பெற்றோரை விரட்டினர்.

ஆம்புலன்ஸ் எதனையும் ஏற்பாடு செய்யவில்லை.

தனியார் ஆம்புலன்ஸ் ஏதாவது கிடைக்குமா? எனக் குழந்தையைத் தனது இடுப்பில் வைத்துக்கொண்டு, அதன் தாய் –

அரற்றிக்கொண்டே அங்கும் , இங்கும் ஓடியது தான் மிச்சம்.

கொஞ்ச நேரத்தில், தாய் மடியிலேயே குழந்தை இறந்து போனது.

கொரோனா நோயாளிகள் மட்டும் பிழைத்தால் போதும் என்று டாக்டர்கள் நினைக்கிறார்களா? என்று தெரியவில்லை.

– ஏழுமலை வெங்க்டேசன்