சென்னை

சென்னை துரைப்பாக்கத்தில் 15 நாட்களுக்கு முன்பு கடத்தப் பட்ட இரண்டரை வயது சிறுவன் விஸ்வா மீட்கப்பட்டுள்ளான்.

சென்னை நகர் துரைப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் குருசாமி (வயது 34).  இவர் கட்டுமானப் பணியில் உள்ளார்.   குருசாமி தனது மனைவி பிரேமலதா (23),  மற்றும் குழந்தைகள் குகன் (5) விஸ்வா (3) மற்றும் விஷாலி (1)  ஆகியோருடன் வசித்து வருகிறார்.   இவர்களது மகன் விஸ்வா கடந்த டிசம்பர் 25ஆம் தேதி இரவு 8 மணி அளவில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது காணாமல் போய் விட்டான்

அதிர்ச்சி அடைந்த பெற்றோர் எங்கு தேடியும் மகன் கிடைக்காததால் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.    அந்தப் பகுதியில் உள்ள பல  கண்காணிப்புக் காமிரா மூலம் வாலிபர் ஒருவர் விஸ்வாவை தூக்கிச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.  பல இடங்களிலும் 15 நாட்களாக காவல்துறையினர் தேடி வந்தனர்.    தற்போது சிறுவனை சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவர் கடத்திச் சென்றது கண்டு பிடிக்கப்பட்டது.   காவல் துறையினர் மாணிக்கத்தை கைது செய்து குழந்தைய மீட்டுள்ளனர்.

விசாரணையில் மாணிக்கத்துக்கு குழந்தை இல்லாததால் அவர் விஸ்வாவை தூக்கி வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.  சிறுவனிடம் மாணிக்கம் மிகவும் அன்பாக இருந்துள்ளார்.   காவல் துறையினர் மீட்ட போது மாணிக்கத்தை விட்டு வர சிறுவன் மறுத்து அடம் பிடித்துள்ளான்.   காவலர்கள் சிறுவனுக்கு தின்பண்டங்கள் அளித்து அழைத்து வந்துள்ளனர்.