டெல்லி: குடியரசு தின அணிவகுப்பில் 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவல் எதிரொலியாக இந்தாண்டு குடியரசு தின அணிவகுப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டு, குடியரசு தின விழாவை பார்வையிட 1,15,000 பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், இம்முறை 25 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.

பார்வையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைக்கப்படுவார்கள். நிகழ்ச்சி முடியும் வரை மாஸ்க் அணிவது கட்டாயம். குடியரசு தின அணிவகுப்பானது, விஜய் சவுக்கில் ஆரம்பித்து, தேசிய மைதானத்தில் முடிவடையும்.

வீரர்களுக்கு இடையே சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில், அணிவகுப்பின் நீளமும் 8.2 கி.மீ தூரத்தில் இருந்து 3.3 கி.மீ ஆக குறைக்கப்பட்டுள்ளது. அணிவகுப்பில் பங்கேற்கும் ஒவ்வொரு குழுவிலும் 144 பேருக்கு பதில் 96 பேர் மட்டுமே இடம்பெறுவார்கள்.

ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படும். அப்போது கொரோனா அறிகுறி இருப்பது யாருக்கேனும் கண்டறியப்பட்டாலும் அவர்களை தனிமைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தனர்.