சீன அரசு, அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ‘055 டெஸ்ட்ராயர்’ போர்க் கப்பலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை ஆசிய நாடுகளிடம் இல்லாத அளவுக்கு அதிநவீன தொழில்நுட்பங்கள் இந்தப் போர்க் கப்பலில்  உள்ளன. இதனால் ஆசிய நாடுகள், இந்த போர்க்கப்பலை எச்சரிக்கையுடன் பார்க்க ஆரம்பித்துள்ளன.

இந்தப் போர்க் கப்பலை அறிமுகப்படுத்தியது குறித்து சீன அரசுத் தரப்பு, ‘இந்தப் புது கப்பலின் மூலம் சீனக் கப்பல்படை மேலும் வலுவடையும். இந்தக் கப்பலில், இதுவரை இல்லாத அளவுக்கு நவீன தொழில் நுட்பங்கள் உள்ளன. புதுவித ஏவுகணைகள், கப்பல்கள், நீர் மூழ்கிக் கப்பல்களும்  உள்ளன’ என்று தெரிவித்துள்ளது.

‘055 டெஸ்ட்ராயர்’  போர்க் கப்பல் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னர், பல கட்ட சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று சீன அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் போர்க் கப்பல் முழுக்க முழுக்க சீனாவிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பலின்  திறனுக்கு ஈடாக இந்தியக் கப்பல் படையிடம் எந்தப் போர்க் கப்பலும் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்தியாவைத்தான் சீனா, தனது முதல் எதிரியாக பார்க்கிறது. ஆகவே இந்தியாவும் தனது கடற்படை திறனை மேலும் மேம்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.