டெல்லி: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் எழுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.

ஜம்முகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது. லடாக்கை தனி யூனியன் என்ற அறிவிப்பையும் எதிர்த்தது.

கடந்த ஆக.16ம் தேதி ஐநாவில் இந்த பிரச்னையை சீனா எழுப்ப முயன்று அது பலிக்காமல் போனது. இம்முறை ஐநாவில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டால் இந்தியாவுக்கு மற்ற நாடுகள் ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ் நாடு இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளது. பிரிட்டனும் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கும் என்று தெரிகிறது. அசுர பெரும்பான்மை பெற்றிருக்கும் போரிஸ் ஜான்சன் நிச்சயம் ஆதரவு தெரிவிப்பார்.

நிரந்தர உறுப்பினர்கள் அல்லாத நாடுகளான போலந்து, ஜெர்மனி ஆகியவையும் இந்தியாவை நிச்சயம் ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த சூழ்நிலையில், சீன வெளியுறவு அமைச்சர் வாங்கி யு அடுத்த வாரம் இந்தியா வருகிறார்.

இருநாட்டு எல்லை பிரச்னை உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்திக்கிறார். அதன் பின்னர் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரையும் சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது.

கடந்த செப்டம்பர் மாதமே அவர் இந்தியா வர திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவரது வருகை தவிர்க்கப்பட்டது.