இந்தியர்கள் பயன்படுத்தும் செல்போன்கள் மூலம் சீனா உளவு பார்ப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அதாவுத, சீனாவால் உருவாக்கப்பட்ட 41, ‘மொபைல் ஆப்’களில், உளவு பார்க்கும் வைரஸ்களுடன் இருக்கின்றன. இதன் மூலம் நம் நாட்டின் மீது, ‘சைபர்’ தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக, புலனாய்வு அமைப்புகளும், ராணுவமும் எச்சரிக்கை விடுத்து இருக்கின்றன.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“இந்தியர்கள் பயன்படுத்தும் மொபைல் ஆப்களில், சீனாவை சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்ட, பிரபலமான, 41 ஆப்கள் உள்ளன. இவற்றில், உளவு பார்க்கும், ‘மால்வேர்’கள் இடம் பெற்றுள்ளன. இந்த மால்வேர்கள், சம்பந்தப்பட்ட மொபைல் ஆப்பை பயன்படுத்துவோர் பற்றிய தகவல்களை, சீனாவில் உள்ள, ‘சர்வர்’ எனப்படும் பிரதான கம்ப்யூட்டருக்கு அனுப்பிவிடும்.

இதனால், நம் நாட்டின் மீது, ‘சைபர்’ தாக்குதல் எனப்படும், மென்பொருள் வழி தாக்குதலை, சீனா தொடுக்கக் கூடிய அபாயம் இருக்கிறது.  இந்த மொபைல் ஆப்கள், ஆப்பிள் மொபைல் போனின், ஐ.ஓ.எஸ்., இயங்குதளத்திலும், ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் செயல்படக்கூடியவை” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், வெய்போ, விசாட், ஷேர்இட், யு.சி.நியூஸ், யு.சி.பிரவுசர், பியூட்டி பிளஸ், நியூஸ் டாக், டி.யு.ரிகார்டர், சி.எம்.பிரவுசர் உள்ளிட்ட, 41 மொபைல் ஆப்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.