ஹாங்காங்: ஹாங்காங் ஆங்கில நாளிதழான தென் சீனா மார்னிங் போஸ்ட் என்ற பத்திரிகையானது, பிரபல பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி பாஜகவின் ஆதரவாளர் என்று விமர்சித்துள்ளது.

ஜனவரி 28 ம் தேதி மும்பையில் இருந்து லக்னோவுக்கு இண்டிகோ விமானத்தில் கோஸ்வாமி, நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா ஆகியோர் பயணித்தனர்.

அப்போது கம்ரா செய்த ஒரு செயலால், ஏர் இந்தியா உட்பட பல விமான நிறுவனங்களில் பயணிக்க கம்ராவுக்கு 6 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தைப் பற்றி தென் சீனா மார்னிங் போஸ்ட் ஒரு செய்தியை வெளியிட்டது. அதில் கூறி இருப்பதாவது: இந்திய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா, இண்டிகோ மற்றும் ஏர் இந்தியாவில் இருந்து பாஜகவின் கூட்டாளியான கோஸ்வாமி பற்றி பேசியதால் பயணிக்க தடை விதிக்கப்பட்டார்.

விமான நிறுவனங்களுக்கு பாஜக அரசு அவ்வளவு அழுத்தம் கொடுத்து இருக்கிறது. அதனால் தான் இந்த தடை நடவடிக்கை.

அர்னாப் கோஸ்வாமி பிரதமர் மோடியின் பாஜகவின் ஆதரவாளர். அக்கட்சியை விமர்சிப்பவர்களை துரோகிகள் என்று முத்திரை குத்தியவர் என்று விமர்சித்து இருக்கிறது.

அவர் பாஜக ஆதரவாளர் என்பதற்கான சரியான ஆதாரங்கள் இல்லாத நிலையில் இப்படி விமர்சிக்கப்பட்டு இருக்கிறது. அர்னாப் பாஜக மற்றும் அதன் கொள்கைகளுக்கு ஆதரவாக இருப்பதால் இவ்வாறு செய்தி வெளியிட்டு இருக்கலாம் என்று ஊடகத்தினர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

அர்னாப் கோஸ்வாமி ரிபப்ளிக் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியராக உள்ளார், இந்த தொலைக்காட்சியானது தேசிய ஜனநாயக கூட்டணியின் )முன்னாள் எம்எல்ஏ ராஜீவ் சந்திரசேகருக்கு சொந்தமானது.