பெய்ஜிங்:

இந்தியா-பூடான்-சீனாவின் முச்சந்திப்பான டோகாலம் பகுதியை ஆக்கிரமிக்க சீனா முயற்சி மேற்கொள்கிறது. பூடான் மற்றும் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது. இதை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது. இதனால் பெரும் ஆத்திரமடைந்த சீனா அடாவடியான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.

இந்தியா தன்னுடைய படையை திரும்ப அழைக்க வேண்டும் என கூறி வருகிறது. அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் ஆனால் படைகளை திரும்ப பெற மாட்டோம் என இந்தியா திட்டவட்டமாக கூறிவிட்டது. இதனால் அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது. சிக்கிம் செக்டாரில் இருநாட்டு ராணுவத்திற்கு இடையே கடும் பதற்ற நிலவி வரும் நிலையில் சீனாவின் அரசு மீடியா குளோபல் டைம்ஸ் திமிர்தனமாக எழுதி வருகிறது.

இந்தியா தன்னுடைய ராணுவத்தை திரும்ப பெறவில்லை என்றால் சிக்கிம் மாநிலத்தை இந்தியாவிடம் இருந்து பிரிப்போம் என தெரிவித்துள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மீடியாவில், சீன மக்கள் இந்தியாவில் உள்ள சிக்கிம் மாநில விடுதலைக்கு தயாராக வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.

“சிக்கிம் விவகாரத்தில் சீனா தன்னுடைய நிலைப்பாட்டை மறு ஆய்வு செய்யும். 2003-ம் ஆண்டு ஒப்பந்தத்தின் போது சிக்கிம்மை இந்தியாவின் ஒரு மாநிலமாக எற்றுக் கொண்டந்தை சீன மறு பரிசீலனை செய்யும். சிக்கிம் தனிநாடு என்ற எண்ணம் கொண்டவர்கள் உள்ளனர்.

சிக்கிம் விவகாரத்தில் உலக நாடுகளின் பார்வை எப்படியிருக்கும் என உணர்ச்சிப்பூர்வமாக உள்ளனர். சுதந்திர சிக்கிம் என்பதற்கு சீன சமூதாயத்திலும் ஆதரவு உள்ளது. அவர்களுடைய கோரிக்கையானது விரிவடையும். சிக்கிமில் சுதந்திர போராட்டத்திற்கு வழிவகைசெய்யும்,” என குளோபல் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அதில், ‘‘பூடான் – இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள ஒப்பந்தப்படி பூடானின் எல்லையைப் பாதுகாக்கும் பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது. அதனால் தான் பூடான் எல்லையில் இந்தியா ராணுவத்தை நிறுத்தி உள்ளது. சமமற்ற ஒப்பந்தங்கள் மூலம் சீனா, பூடானின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பை இந்தியா பாதிக்கிறது’’ என குறிப்பிட்டுள்ளது.

பூடான் மற்றும் சிக்கிமில் இந்தியாவிற்கு எதிரான இயக்கங்கள் காணப்படும். இந்தியாவிற்கு இது எதிர்மறையாக பாதிப்பை ஏற்படுத்தும். தெற்கு இமாலைய புவிசார் அரசியலை மாற்றி எழுதும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.