டெல்லி: லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து சீன ராணுவம் 2 கிமீ தூரம் பின்வாங்கி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
லடாக்கின் கல்வான் பகுதியில் இந்தியா ராணுவம் மற்றும் சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் உயிரிழந்ததாக இந்தியா அறிவித்தாலும் அதை சீனா ஏற்கவில்லை.
பதற்றம் அறிவிக்கவே இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். கடந்த 3ம் தேதி பிரதமர் மோடி, திடீரென லடாக் சென்று ஆய்வு செய்தார். வீரர்கள் மத்தியிலும் அவர் பேசினார்.
இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து 1 கி.மீ., தூரம் சீன படைகள் திரும்பி சென்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 24 மணி நேரத்தில், கல்வான் நதி வளைவில் இருந்து திரும்பி செல்ல தொடங்கி உள்ளதாகவும், கட்டமைப்புகளை அகற்றியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இது தொடர்பாக இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் கூறி இருப்பதாவது: பேச்சுவார்த்தை முடிவின்படி, சீன ராணுவம்  2 கி.மீ., தூரம் பின்வாங்கி சென்றுள்ளது. கூடாரங்கள், வாகனங்களை எடுத்து சென்றுவிட்டனர். ஆனால், சில வாகனங்கள் தொடர்ந்து கல்வான் பகுதியில் உள்ளது. இந்திய ராணுவம் விழிப்புடன் இருக்கிறது என்றார்.