டில்லி: இந்தியா சீனா இடையே எல்லை பிரச்னை இருந்து வரும் நிலையில், நேபாள எல்லைப் பகுதியான லீபுலேக் கணவாய் பகுதியில் சீன தனது படைகளை குவித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த பகுதியில் சீனாவின்  நவீன போர் விமானமான ஜே-20 ஐ விமானங்கள் நிறுத்தப்பட்டு உள்ளதாக,  சீன அரசு பத்திரிகையான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

ஏற்கனவே ஜூன் மாதம் காஷ்மீர் மாநிலம் லடாக் கல்வான் பள்ளத்தாகு எல்லைப்பகுதியில், இந்திய எல்லைப்பகுதிக்குள் புகுந்த சீன படையினரை தடுத்து நிறுத்திய, இந்திய படைகள், அவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். இதில்,  20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து பதற்றத்தை தணிக்க எல்லையில் இரு நாட்டு படைத் தலைவர்கள் அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அப்போது இரு தரப்பிலிருந்து கணிசமான படைகள் விலக்கிக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இருந்தாலும் சீனாவின் நடவடிக்கை, எதிர்மறையாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது, சீனப்படைகள்,   இந்திய, நேபாள, சீன எல்லைப்பகுதியான இந்தியா விற்கு சொந்தமான உத்தரகண்ட் மாநிலத்திற்குட்பட்ட சில பகுதிகளான கலாபானி பள்ளத்தாக்கின் லிபுலேக் கணவாய் பகுதியில்  தனது படைகளை குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய சீன எல்லையில் இரண்டு ஜே-20 போர் விமானங்கள் இருப்பதற்கான சாட்டிலைட் படங்களை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதன்படி,  எல்லையில் இருந்து சுமார் 320 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சீனாவின் ஹோட்டன் விமான நிலையத்தில் இந்த விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில்,  சீன அரசு பத்திரிகையான குளோபல் டைம்ஸ் பத்திரிகையில்,  சீனாவின் நான்காம் தலைமுறை போர் விமானமான ஜே-20, நீண்ட தூரம் பறக்கும் திறன் வாய்ந்த போர் விமானங்கள் அங்கு வந்துள்ளதாக தெரிவித்து உள்ளது.

நேபாளம் நாடு  தனது புதிய வரைபடத்தில் இப்பகுதியை ஆக்கிரமித்துள்ள நிலையில் தற்போது சீன ராணுவம் படைகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.