திருவண்ணாமலை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமி அன்று கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக  மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  அதன்படி, வரும்  27ம் தேதி சித்ரா பவுர்ணமி அன்று யாரும் திருவண்ணாமலை வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மக்கள் கூட்டத்தை தடுக்கும் வகையில் கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் தளர்வுகள் வழங்கப்பட்டதால், மீண்டும் கிரிவலம் தொடங்கியது. பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் கோவில்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர்.. ஆனால், தற்போது மீண்டும் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளதால், திருவண்ணாமலை கிரிவலம் செல்லவும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிரபலமான சித்ரா பவுர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார். வரும்  27ம் தேதி சித்ரா பௌர்ணமி அன்று யாரும் திருவண்ணாமலை வர  வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டும், கொரோனா காரணமாக சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.