மிலன்: கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 72 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, தான் விளையாடும் இத்தாலியின் கிளப் அணியான யுவண்ட்ஸ் கிளப் அணிக்கு திரும்பியுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி இவரின் அணி, மிலன் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வ‍ென்றது. அதன்பிறகு கொரோனா காரணமாக போட்டித் தொடர் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தனது சொந்த நாடான போர்ச்சுகலுக்கு சென்றார் ரொனால்டோ. அங்கு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில், இத்தாலியில் மே 5ம் தேதி முதல் கால்பந்து பயிற்சிகளுக்கு அனுமதி தரப்பட்டது. ஜூன் மாதம் 14ம் தேதி முதல் ரசிகர்கள் அல்லாத போட்டிகளுக்கு அனுமதி தரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த மாத துவக்கத்திலேயே இத்தாலி திரும்பிய ரொனால்டோ, தன்னை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டார். அதனையடுத்து, 72 நாட்கள் கழித்து, பயிற்சிக்காக காண்டிநாஸா மைதானத்திற்கு வருகை தந்தார். அங்கு, யுவண்டஸ் அணியின் வீரர்களுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார்.