Claiming victory, Turkey’s Erdogan says may take death penalty to referendum

 

துருக்கியில் மரணதண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவருவது குறித்து மற்றொரு வாக்கெடுப்பு நடத்தப்படும் என அதிபர் தாயிப் எர்டோகான் தெரிவித்துள்ளார்.

 

துருக்கியில் அதிபருக்கு  எல்லையற்ற அதிகாரங்களை வழங்குவது குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அதிபர் தாயிப் எர்துவான் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் 2029 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் நீடிக்க முடியும்.

 

99.45 சதவீதம் பதிவான வாக்குகளில் “ஆம்” என்று 51.37 சதவீதத்தினரும், “இல்லை” என்று 48.63 சதவீதத்தினரும் வாக்களித்துள்ளனர்.

 

இந்த வெற்றிக்குப் பின்னர் இஸ்தான்புல்லில் திரளாகக் கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றிய எர்டோகான், துருக்கியில் மரணதண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது குறித்து இதே போல் மற்றொரு வாக்கெடுப்பு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

 

நாடாளுமன்ற அமைப்பில், நிர்வாக அதிகாரம் கொண்ட அதிபர் இடம்பெறுவது, நாட்டை நவீனப்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

ஆனால் துருக்கியின் இரண்டு முக்கிய எதிர்கட்சிகள் இந்த முடிவுகளை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளன.

 

குடியரசு மக்கள் கட்சி, 60 சதவீத வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

 

முத்திரை இல்லாத வாக்குச் சீட்டுகளையும் எண்ணிக்கைக்கு எடுத்துக் கொண்டதை அந்த கட்சி விமர்சனம் செய்துள்ளது. இல்லை என்றால் அது நிருபிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

 

மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியடைந்த எர்துவானின் ஆதரவாளர்கள் பெரிய நகரங்களில் பேரணிகளை நடத்தினர்; அச்சமயத்தில், இஸ்தான்புல்லில் வாக்கெடுப்பை எதிர்க்கும் தரப்பு, எதிர்ப்பை தெரிவிக்கும் பாரம்பரிய முறையில், பானைகளையும் தட்டுகளையும் தொங்கவிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

 

துருக்கியின் தென் கிழக்கு மாகாணமான டியார்பாக்கரில், வாக்குச் சாவடிக்கு அருகில், எப்படி வாக்களித்தார்கள் என்பது குறித்து எழுந்த சர்ச்சையில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.