சென்னை:

தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரங்களை வாபஸ் பெற முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று டில்லி செல்கின்றனர்.

பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணியும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க., அம்மா அணியும் தனித்தனியாக செயல்பட்ட போது இரு அணிகளின் சார்பிலும் பல லட்சம் பிரமாண பத்திரங்கள் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்டது.

இதில், முதல்வர் பழனிசாமி அணி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரங்களில் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக தினகரனும் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது 2 அணிகளும் ஒன்று சேர்ந்து விட்டன. சசிகலா மற்றும் தினகரனை ஒதுக்கி வைக்க முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஏற்கனவே தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை வாபஸ் பெற நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

எனவே, முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இன்று டில்லி செல்கின்றனர் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். அங்கு தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரங்களை வாபஸ் வாங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.