சென்னை:
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
தமிழகத்தில் மாவட்டம்தோறும் மருத்துவக்கல்லூரிகள் அமைக்கும் பணியில் தமிழகஅரசு தீவிரம் காட்டி வருகிறது. ஏறகனவே பல புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டிடப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று ரூ.336 கோடி செலவில் திருப்பூரில் அமையவுள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு தமிழக முதல்வர் தலைமைச்செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மலம்  அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “தமிழக அரசு, மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரிகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் 2017-18 ஆம் கல்வியாண்டில் புதுக்கோட்டையில் 150 மாணவர்கள் சேர்க்கையுடன் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரியும், 2019-20 ஆம் கல்வியாண்டில் கரூரில் 150 மாணவர்கள் சேர்க்கையுடன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரியும் தொடங்கப்பட்டன.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்பட்டு வந்த ஐ.ஆர்.டி. மருத்துவக் கல்லூரியானது 2019-20 ஆம் கல்வியாண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
மேலும், மத்திய அரசின் நிதியுதவியுடன், கடந்த 2019-ம் ஆண்டில், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நீலகிரி, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று சரித்திர சாதனையை படைத்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், திருப்பூர் மாநகராட்சி மற்றும் திருப்பூர் தெற்கு வட்டத்தில் உள்ள நல்லூர் கிராமப் பகுதியில் சுமார் 11.28.0 ஹெக்டேர் நிலப் பரப்பில் 150 எம்பிபிஎஸ் மாணவர்கள் சேர்க்கையுடன் புதிய திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி அமைய உள்ளது.
இம்மருத்துவக் கல்லூரி நிறுவிட, மத்திய அரசு 60 விழுக்காடு பங்களிப்பாக 195 கோடி ரூபாய் நிதியை வழங்கும். எஞ்சிய 141 கோடியே 96 லட்சம் ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்கும். இந்த புதிய அரசு மருத்துவக் கல்லூரியை நிறுவிட 336 கோடியே 96 லட்சம் ரூபாய் அனுமதித்து நிர்வாக ஒப்புதலையும், முதல்கட்டமாக 100 கோடி ரூபாய் நிதி ஒப்பளிப்பு செய்தும் 12.11.2019 அன்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில், புதிதாக அமையவுள்ள மருத்துவக் கல்லூரி கட்டிடங்களுக்கு இன்று (மே 18) தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.