சேலம் :

தேர்தல் நேரத்தில் அமைக்கப்படும் கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சேலம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, செய்தியாளர்கள் கூட்டணி குறித்து பல்வேறு கேள்வி எழுப்பினர். அதிமுகவை தாறுமாறாக விமர்சித்து வந்த பாமக மற்றும், தேமுதிகவிடம் கூட்டணி குறித்து பேசி வருகிறீர்களே என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த எடப்பாடி,  தேர்தல் சமயத்தில் அமைக்கப்படும்  கூட்டணி என்பது வேறு, கட்சிகளின் கொள்கை என்பது வேறு என்று விளக்கம் அளித்தார். அதுபோலத்தான் பாமகவுடன் நாடாளுமன்ற, சட்டமன்ற இடைதேர்தலுக்காக கூட்டணி வைக்கப்பட்டுள்ளது என்று தெளிவு படுத்தினார்.

மேலும், தேமுதிகவுடனும் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறியவர், தேமுக அதிமுக கூட்டணியில் இணையும் என்று நம்புவதாக கூறினார். மேலும் சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தை தொடர்ந்து வருகிறது… விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

சமூக ஆர்வலர் முகிலன் குறித்த கேள்விக்கு, முகிலனை மீட்கும் விவகாரத்தில், அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்தால் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த முறை தனியாக நின்று 37 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இப்போது கூட்டணி மற்றும் மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளதால் 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறுவோம். நாடு முழுவதும் பார்க்கும்பொழுது பா.ஜ.க. தலைமையில்தான் கூட்டணி. தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி.

இவ்வாறு அவர் கூறினார்.