கொல்கத்தா:
மத்தியில் ஆட்சி அமைப்பத்தில் மேற்குவங்கத்தின் பங்கு உறுதியாக இருக்கும் என்று தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, மத்திய அரசை தீர்மானிப்பதில் மேற்கு வங்கமும் உத்தர பிரதேசமும் முக்கியமான மாநிலங்களாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தென் மாநிலங்களில் பாரதியஜனதா கட்சிக்கு ஒரு தொகுதிகள் கூட கிடைக்காது என்றும் உறுதிபட தெரிவித்து உள்ளார்.
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 2 கட்ட தேர்தல் முடிவடைந்து உள்ளன. இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு மத்தியில் புதிய கூட்டணிதான் ஆட்சியமைக்கும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய மம்தா, தேர்தலுக்கு பிறகு மத்தியில் தொங்கு பாராளுமன்றம் அமையும் என்று தெரிவித்துள்ளவர், மேற்கு வங்கமும் உத்தர பிரதேசமும் மத்திய அரசை தீர்மானிப்பதில் முக்கியமான மாநிலங்களாக இருக்கும் என்றார்.
மேலும் கூறும்போது, தென்மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, பஞ்சாப், தமிழ்நாடு, பஞ்சாப், டெல்லி ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க ஒரு தொகுதியில் கூட கிடைக்காது என்றவர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர் மாநிலங்களில் பா.ஜ.க வின் பலம் பெருமளவில் குறையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதுபோல, காங்கிரஸால் தனிப்பட்ட முறையில் ஆட்சி அமைக்க முடியாது என்றவர், தற்போது அனைத்து மாநிலக் கட்சிகளும் தற்போது வலிமையாக உள்ளன. அதனால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், தேசிய ஜனநாயக கூட்டணியும் ஆட்சி அமைக்காது என்று கூறினார்.
மேலும், மத்தியில் புதிய கூட்டணி ஆட்சி அமைக்கும், அதற்காக காத்திருப்போம். ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஒடிசா, பீகார், அசாம் மாநிலத் தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து பேசி குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் எங்களுக்கான தலைவர்களைத் தேர்ந்தெடுப்போம்.
இவ்வாறு கூறினார்.
சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய மம்தா, நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, புதிய அரசு திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் அமையும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.