சென்னை:

தி.மு.க வுடன் நடைபெற்ற கூட்டணி பேச்சு வார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சு வார்த்தை  சுமூகமாக நடைபெற்றுள்ளதாக மதிமுக பொருளாளர் கணேச மூர்த்தி கூறி உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக, திமுக தலைமையில் காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் கூட்டணி அமைத்து வருகின்றன. ஏற்கனவே திமுக காங்கிரஸ் கூட்டணி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், நேற்று திமுகவுடன் கம்யூனிஸ்டு கட்சிகள் பேச்சு வார்த்தை நடத்தின. இன்று மதிமுக, விடுதலை சிறுத்தைகள் பேச்சு வார்த்தை நடத்தும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று மதிமுக நிர்வாகிகள் கூட்டணி குறித்து  பேச அண்ணா அறிவாலயம் வந்தனர். தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவினரான துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, பொன்முடி, எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்டோருடன் ம.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினரான அ. கணேசமூர்த்தி, மல்லை சத்யா, புலவர் செவந்தியப்பன், டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், சந்திரசேகரன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சு வார்த்தை முடிந்த பிறகு செய்தியளார்களிடம் பேசிய  ம.தி.மு.க. பொருளாளர் கணேசமூர்த்தி,  திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்ததாகவும், தொகுதிகள் எண்ணிக்கை இனிமேல்தான் முடிவாகும் என்றும் தெரிவித்தார்.‘