காபி – உலகின் பிரபலமான பானமான இது, இன்றும் களைப்புக்கும், சோம்பலுக்கும் பலராலும் விரும்பி அருந்தப்படுவது – பலருக்கும் அமுதம் போன்றது.  ஆனால், காலை நேர விருந்தான இது வெறும் வயிற்றில் அருந்தும்போது நமக்கு விரும்பத்தகாத, தேவையற்ற தீங்கு விளைவிக்கும் என்றால் நம்ப முடிகிறதா? குறைவான/தொந்தரவுக்கு உள்ளான ஒரு தூக்கம் கொண்ட இரவுக்கு பின் வெறும் வயிற்றில் காபி குடிப்பது வளர்சிதை மாற்றத்தையும் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டையும் கணிசமாக பாதிப்பதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. காலை உணவுக்குப் பிறகு காபி கொட்டையில் இருந்து பெறப்படும் காபியை அருந்துவது நமது உடலின் உணவை ஆரோக்கியமான முறையில் செரிமானத்திற்கு உட்படுத்தும் செயல்முறையை மேம்படுத்துவதாக கண்டறிந்துள்ளனர்.

வளர்சிதை மாற்றத்தைக் குறிக்கும் பல்வேறு வேதிப் பொருட்களை ஆராய்ந்த பின்னர், குறைவான/தொந்தரவு செய்யப்பட்ட தூக்கம் மற்றும் காலை நேர காபியின் விளைவுகளை விவரித்த பாத் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், குறைவான இரவு தூக்கத்திற்கு பின்னர் வெறும் வயிற்றில் காபியைக் குடிப்பது நமது வளர்சிதை மாற்றம் மற்றும் இரத்த குளுக்கோஸ் கட்டுப்பாட்டிலும் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்றனர். நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் போன்ற நிலைமைகளின் அபாயத்தைக் குறைக்க நமது இரத்த சர்க்கரை அளவை பாதுகாப்பான எல்லைக்குள் வைத்திருப்பதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவுகள் உடல்நிலையில் “நீண்டகால” தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட அவர்களின் ஆய்வில், 29 ஆரோக்கியமான ஆண்களும் பெண்களும் சீரற்ற வரிசையில் மூன்று வெவ்வேறு ஒரே நாள் இரவு நேர  சோதனைகளை மேற்கொண்டனர். முதல் இரண்டு சூழ்நிலைகளில், பங்கேற்பாளர்களுக்கு முதலில் ஒரு சாதாரண இரவு தூக்கத்திற்கு  பின் விழித்தவுடன் ஒரு சர்க்கரை பானம் வழங்கப்பட்டது. பின்னர் மீண்டும் ஒரு குறைவான நேர இரவு தூக்கத்திற்குப் பிறகு அதே பானம் வழங்கப்பட்டது. குறைவான/தொந்தரவான  தூக்கம் என்பது, அவர்கள் ஒவ்வொரு மணி நேர தூக்கத்திற்கு பிறகும் ஐந்து நிமிடங்கள் எழுப்பட்டனர்.
 

மூன்றாவது சூழ்நிலையில், அவர்களின் தூக்கம் இதேபோல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டது. ஆனால் சர்க்கரை பானத்தை உட்கொள்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அவர்களுக்கு ஒரு அடர் கருப்பு காபி வழங்கப்பட்டது. ஒவ்வொரு பரிசோதனையிலும் ஒரு பொதுவான காலை உணவின் கலோரிகளை பிரதிபலிக்கும் குளுக்கோஸ் பானத்தைத் தொடர்ந்து பங்கேற்பாளர்களிடமிருந்து இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன. முடிவுகளை ஒப்பிட்டபோது, சாதாரண தூக்கம், மற்றும் வெறும் தொந்தரவான தூக்கம் கொண்ட முடிவுகளுக்குள் எந்த ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் காண முடியவில்லை. ஆனால், காலை உணவுக்கு முன் அடர் காபி உட்கொண்டவர்களில், இரத்த குளுகோஸ் அளவின் மீது சுமார் 50% அளவுக்கு தாக்கத்தை கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. இது காலை நேர காபி அருந்தும் 2 மில்லியன் அளவுக்கான மக்களுக்கும் பொருந்தும்.