சென்னை:

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் முயற்சித்தனர்.

அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது கூட்டத்தை கட்டுபடுத்தும் வகையில் போலீஸ் உதவி கமிஷனர் ஜெயராமன், பெண் சப் இன்ஸ்பெக்டரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது.

கூட்டத்திற்குள் சிக்கி கொண்ட அந்த பெண் போலீசை காவல்துறை அதிகாரி தகாத இடங்களில் தொட்டுள்ளார். கோவை காந்திபுரம் சிக்னல் அருகே நடந்த இந்த சம்பவம் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

இதனையடுத்து பெண் எஸ்.ஐயிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக உதவி ஆணையர் ஜெயராமனை காத்திருப்போர் பட்டியலுக்க மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.