திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 14-ம் தேதி முதல் தற்காலிக காய்கறிகள், மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்தையும் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக   மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கான பல்வேறு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளில், அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியளார்கள், காவல துறையினர், தூய்மை பணியாளர்கள் உட்பட அனைவரும் இரவு, பகல் பாராமல் 24 மனி நேரமும் பணியாற்றி வருகிறார்கள்.

இதன்படி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், மருந்துகள், உட்பட அனைத்தும் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 14.04.2020 முதல் அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் தற்காலிக சந்தைகள் மூடப்படுகிறது. இதற்கு மாற்றாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காய்கறிகள் மற்றும் பழங்கள் வாகனங்கள், தள்ளு வண்டிகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அரிசி, பருப்பு, எண்ணெய் என அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், சூப்பர் மார்கெட்கள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்படுகிறது. இதற்கு மாற்றாக அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தங்களது வாடிக்கையாளர்களின் வீடுகளில் நேரடியாக சென்று விநியோகம்  செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள், வங்கி ஏடிம்-கள், எரிவாயு முகவர்கள், இறைச்சி கடைகள் ஏற்கனவே உள்ள நடைமுறைகளின் அடிப்படையில் தொடர்ந்து செயல்படும்.  திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக எடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட கட்டுப்பாடுகளை பொது மக்கள், வியாபாரிகள், வணிகர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை மாவட்டத்தில் உதவி செய்ய விரும்புவர்கள் அத்தியாவசிய் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், பேக்கரி பொருட்கள், உட்பட அனைத்தும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு உள் அரங்கத்தில் நேரடியாக வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், சம்மந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோரிடமும் நேரடியாக வழங்கலாம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்குவது குறித்த விரவங்களை மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கொரோனா கட்டுப்பாட்டு அறையில் 1077, 04175-232377 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இந்த அறிவுரைகளை மீறி யாரேனும் செயல்பட்டால், அரசின் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கருதி, அவர்கள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கை காவல் துறை மூலம் எடுக்கப்படும்“ என்று தெரிவித்துள்ளார்.