அய்யம்பாளையம் பகுதியில் 100க்கும் மேற்பட்டவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறப்பட்டதையடுத்து, கலெக்டர் கந்தசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு கணக்கெடுப்பில் ஈடுபட்டார்.

திருவண்ணாமலை தாலுகா அய்யம்பாளையம் புதூர் கிராமத்தில் சுமார் 40 வருடங்களாக 150-க்கும் மேற்பட்ட குடுகுடுப்பைகாரர்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ளவர்கள் தொழிலுக்காக வெளியூர் செல்லும்போது தங்கள் குழந்தைகளையும் அழைத்து செல்கின்றனர். இதனால் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் உள்ளதாக கலெக்டருக்கு தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று அய்யம்பாளையம் புதூர் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கலெக்டரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

அதை தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் பேசிய கலெக்டர் கந்தசாமி, “மக்களின் நலனுக்காகவும், தொழிலை மேம்படுத்தவும் அரசு மூலமும், தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலமும் பல்வேறு திட்டங்கள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் சுயதொழில் தொடங்கவும் பல்வேறு வகையில் லோன் வழங்கும் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

இந்த பகுதியில் உள்ள குழந்தைகள் பள்ளிக்கு செல்வில்லை என்று அறிந்தேன். இங்கே உங்கள் குழந்தைகளின் நலனுக்காக ஆரம்பப் பள்ளி கற்கும் வகையில் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி இங்கு தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் பள்ளியில் சேர்க்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் மாதம் ரூ.400 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த பள்ளியில் மதிய உணவு வழங்கப்படும். இதில் உங்களில் விருப்பம் உள்ள ஒருவருக்கு சமையலர் வேலை வழங்கப்படும். இந்த பள்ளியில் பாடம் நடத்த உங்களில் யாராவது பட்டப்படிப்பு படித்து இருந்தால் அவர்களுக்கு வேலையும் வழங்கப்படும். வாழ்வாதாரத்திற்கு தொழில் முக்கியம் தான், அதை விட இந்த காலத்தில் கல்வி மிகவும் முக்கியமானது. எனவே உங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து படிக்க வையுங்கள்” என்று வேண்டிக்கொண்டார்.

இதனை தொடர்ந்து மக்களின் குறைகளை கேட்டறிந்த அவர், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.